சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பிரதமர் ஆலோசனை
புதிய சந்தைகளில் நுழைய விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவை தவறவிடக் கூடாது. அங்கும் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் லீ சியன் லூங் தமது வெளிநாட்டுப் பயணத்தின் இறுதியில் பேசியிருக்கிறார்.
"ஆப்பிரிக்கா பெரிய கண்டமாகும். சிக்கலானது. ஆபத்து இல்லாமல் இருக்காது. ஆனால் சிங்கப்பூருடன் நல்லுறவை வளர்க்க விரும்பும், துடிப்புமிக்க, நல்லெண்ணம் கொண்ட நாடுகள் அங்கு உள்ளன," என்று தென்னாப்பிரிக்கா, கென்யாவுக்கான ஆறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் லீ தெரிவித்தார்.
"உலகம் முழுவதும் சிரமமான சூழல் நிலவினாலும் புதிய சந்தைகளைக் கண்டறிவதில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். தற்போது ஈடுபட்டுள்ள தொழில்களை வலுப்படுத்து வதோடு இதற்கு அப்பாலுள்ள வர்த்தக வாய்ப்புகளையும் கண்டறிய வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
"தொழில்மயமாதல் தொடங்கியதிலிருந்தே ஆசியா, சீனா, இந்தியா போன்றவை நமது வழக்கமான சந்தைகளாக இருந்து வருகின்றன. இதையும் தாண்டி புதிய சந்தைகளுக்குள் நுழைய வேண்டும். அந்த வகையில் ஆப்பிரிக்கா மீது நாம் கவனம் செலுத்த வேண்டிய கண்டங்களில் ஒன்றாக உள்ளது," என்று திரு லீ குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் நாடாளு மன்றத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப் உரை நிகழ்த்திய பிறகு உறுப்பினர்கள் விவாதித்தனர்.
அப்போது பேசிய திரு லீ, மற்றவர்களுடன் வணிகம் புரிவதும் மதிப்பை அதிகரிப்பதுமே சிங்கப்பூரின் உயிர்நாடி என்று கூறியிருந்தார்.
"ஆபத்துகளை எதிர்கொண்டு புத்தாக்கத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட விரும்பும் வேளையில் மற்ற நாடுகளுடனான தொடர்பை இரட்டிப்பாக்க வேண்டும்.
"நிறைய பிரச்சினைகள் உள்ள நாடுகள் (ஆப்பிரிக்காவில்) இருக்கின்றன. மற்ற சில நாடுகளில் உறுதிப்பாடு உள்ளது. மற்றும் சில நாடுகளில் சிக்கல்கள் உள்ளன. ஆனால் யாருடன் சேர்ந்து தொழிலைத் தொடங்கலாம், எந்தத் துறையில் நுழையலாம் என்பதை அறிந்திருந்தால் வாய்ப்புகளை விடாமல் கைப்பற்ற வேண்டும். தென்னாப்பிரிக்காவிலும் கென்யாவிலும் உள்ள இதுபோன்ற வாய்ப்புகளையும் தவறவிடக் கூடாது," என்று பிரதமர் லீ மேலும் தெரிவித்தார்.
சென்ற செவ்வாய்க்கிழமை தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, ஆப்பரிக்க நாடுகளில் உள்ள வாய்ப்புகளை சிங்கப்பூர் நிறுவனங்கள் பயன்படுத்தி வளர்ச்சியடைந்து முன்னேறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பயணத்தோடு பிரதமர் லீ, ஓராண்டுக்குள் மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். 2022 ஜூனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் ருவாண்டா சென்றார்.

