அதிக மதிப்புமிக்க ரூ. 2000 நோட்டு மீட்டுக் கொள்ளப்படும் என்ற இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பு நாடு முழுவதும் புயலைக் கிளப்பியிருக்கும் வேளையில் அந்த நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரூ.2000 (S$32.44) நோட்டை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது முதலீடு செய்யலாம் என்று இந்தியாவின் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
அதே சமயம் 2000 ரூபாய் நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் என்று அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரூ.2000 நோட்டு மீட்டுக் கொள்ளப் படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை, அல்லது பொருளியலைப் பாதிக்காது என்று நிதி அமைச்சின் உயர் அதிகாரியான டி.வி. சோமநாதன் கூறினார்.
இவ்வாண்டு இறுதியில் நான்கு பெரிய மாநிலங்களிலும் அடுத்த ஆண்டில் நாடாளு மன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கும் வேளையில் ரூ.2000ஐ மீட்டுக்கொள்ளும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது ரிசர்வ் பேங்கின் வழக்கமான நடைமுறை என்று அதன் முன்னாள் துணை ஆளுநர் ராம சுப்ரமணியம் காந்தி தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று அதிரடியாக அறி விக்கப்பட்ட பிறகு அரசாங்கம் ரூ.2000 நோட்டுக்களை வெளியிட்டது. தற்போது இதன் நோக்கம் நிறைவேறிவிட்டது.
இந்தியாவில் சாதாரண மக்களிடம் ரூ.2000 நோட்டுப் புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் மின்னிலக்கப் பரிவர்த்தனை மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்டதால் ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்துவதில்லை. சிலர், 2000 ரூபாய் நோட்டைப் பார்த்து பல மாதங்கள் ஆகி விட்டதாகக் கூறுகின்றனர். 2018-19இல் இரண்டாயிரம் ரூபாய் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.
இதற்கிடையே ரூ.2000ஐ மீட்டுக் கொள்வதை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்று உள்ளார்.
"ஊழல், பதுக்கல், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மூல காரணமான இருக்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு களை ரத்து செய்ய வேண்டும் என்று நான் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறேன். இந்த நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை பெரிய அளவில் தடுக்க உதவும்," என்று அவர் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி, இது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கமான பாணி என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்!, கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!," என்று டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார்.

