மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரின் காற்பந்துத் திடலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். தலைநகர் சான் சல்வடோரில் சனிக்கிழமை நடைபெற்ற காற்பந்துப் போட்டி ஒன்றைக் காண முயன்ற கூட்டத்தினரிடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
அலியான்ஸா, ஃபாஸ் என்னும் உள்ளூர் காற்பந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது திடலின் வாயிற்கதவுகள் மூடப்பட்டு இருந்தன. எதிர்பாராத வகையில் வெளியே திரண்ட பெருந்திரளான ரசிகர் கூட்டம் திடலுக்குள் நுழைய முயன்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நுழைவாயிலில் இருந்த தடுப்புகளை அகற்ற ரசிகர் கூட்டம் முயல்வதை அந்தக் காணொளியில் காணமுடிந்ததாக பிபிசி செய்தி தெரிவித்தது.
யூடியூப் ஊடகத்தில் காற்பந்துப் போட்டி நேரலையாகக் காண்பிக்கப்பட்டது. திடீரென்று போட்டி நிறுத்தப்படுவதும் அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக சிலரை மருத்துவப் படுக்கைகளில் கொண்டு செல்வதும் அதில் தெரிந்தது.
சிறுவர்கள் உள்ளிட்ட 90 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக எல் சல்வடோர் சுகாதார அமைச்சர் ஃபிரான்சிஸ்கோ அலாபி தமது டுவிட்டரில் தெரிவித்தார்.
இதற்கிடையே, தேசிய காவல் துறையும் தலைமைச் சட்ட அதி காரி அலுவலகமும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தும் என்று எல் சல்வடோர் அதிபர் நயிப் புக்கெல் தெரிவித்தார்.
காற்பந்து அணியினர், அவற்றின் நிர்வாகிகள், திடல் நிர்வாகிகள், நுழைவுச்சீட்டு அலுவலர்கள், காற்பந்துச் சங்கத்தினர் என்று ஒருவர் விடாமல் விசாரிக்கப்படுவர் என்றும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் கடுமையாகக் கூறினார்.

