ஊழியர்களுக்கும் சிங்கப்பூரின் அரசாங்கம், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் முத்தரப்புப் பங்காளித்துவத்துக்கும் வலுவாக ஆதரவுக்குரல் எழுப்பிவரும் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்குக்கு இவ்வாண்டின் ஆக உயரிய மே தின விருதான கௌரவப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் இயக்கத்திற்கு உயரிய சேவையாற்றியுள்ள நபர்களுக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) கௌரவப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் திறன் மேம்பாடு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் கொவிட்-19 கொள்ளைநோயின்போது வேலைகளைக் காப்பாற்றவும் திரு வோங் முற்பட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிய கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் நிச்சயமற்ற சூழலை சிங்கப்பூர் கடந்துவர ஒரு வழிகாட்டியாக திரு வோங் இருந்ததாக நேற்று நடைபெற்ற வருடாந்திர மே தின விருதளிப்பு நிகழ்ச்சியில் என்டியுசியின் தலைவர் மேரி லியூ குறிப்பிட்டார்.
"கொள்ளைநோய்க்குப் பிறகு சவால்மிக்க ஒரு சூழலில் 4ஜி குழுவை முன்னெடுத்துச் செல்வதற்கு இடையே ஊழியர்களின் கவலைகளுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருபவர் திரு வோங்," என்றார் திருவாட்டி லியூ.
சன்டெக் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருதளிப்பில் திரு வோங் உள்பட தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்புப் பங்காளிகள் என மொத்தம் 172 பேர் அங்கீகரிக்கப்பட்டனர்.

