சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து ஒரு மில்லியனைத் தாண்டியது. 2023ல் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அந்த எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது. அத்துடன் 2020ல் கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து சுற்றுப்பயணிகளின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியிருப்பது இது இரண்டாவது முறை.
கடந்த ஏப்ரலில் இங்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 1.13 மில்லியனுக்குக் கூடியது. அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 1.02 மில்லியனைக் காட்டிலும் இது அதிகம்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இது தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை, கிருமிப்பரவலுக்கு முன்னர் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவான 1.7 மில்லியனைவிட குறைவாக இருந்தாலும் கிருமிப்பரவலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகளின் பட்டியலில், இந்தோனீசியா 13வது மாதமாக முன்னணி வகிக்கிறது. சிங்கப்பூருக்கு வந்த இந்தோனீசிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் 220,067ஆகப் பதிவானது. அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 171,507ஐ விட இது அதிகம்.
அடுத்தபடியாக, பட்டியலில் இரண்டாம் இடத்தில் மலேசியா இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து, 98,190 வருகையாளர்கள் சிங்கப்பூர் வந்திருந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 97,835ஐ விட அது அதிகம். தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக மூன்றாம் இடத்தில் வந்துள்ளது, இந்தியா. ஏப்ரலில் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 97,029. அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 75,338ஐக் காட்டிலும் அது அதிகம்.

