பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய மத்திய அஞ்சல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டடம் பெரும் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழைமைவாய்ந்த முக்கியமானதொரு இடமாகக் கருதப்படும் அந்தக் கட்டடம், நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு அனுப்பப்பட்டன.
கட்டடத்திலிருந்து வானை நோக்கிப் பலநூறு மீட்டர் உயரம் வரை கரும்புகை எழுந்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தீயணைப்பாளர்கள் ஏழு மணிநேரத்திற்கு மேல் போராடியதாகக் கூறப்படுகிறது.
"அடித்தளம் முதல் ஐந்தாவது மாடி வரை முழு கட்டடமும் தீக்கு இரையாகிவிட்டது," என்று தலைமை அஞ்சல் அதிகாரி லூயிஸ் கார்லோஸ் தெரிவித்தார்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படம்: ராய்ட்டர்ஸ்