இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்து சிறிய மதிப்பிலான நோட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான சேவை நேற்று தொடங்கியதை முன்னிட்டு, அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் தயார்நிலையில் இருந்தன.
அதிகமான வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்க்கும் வங்கிகள், கூட்ட நெரிசலைச் சமாளிக்க பாதுகாப்பை அதிகரித்துள்ளன. மேலும், சிறிய மதிப்புடைய நோட்டுகள் போதிய இருப்பில் இருப்பதை அவை உறுதிசெய்துள்ளன.
இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பொதுத்துறை வங்கியின் மண்டல நிர்வாகி ஒருவர், "சனிக்கிழமை காலை நாங்கள் கண்ட கூட்டத்தைப்போல அதிகமானோர் வருவதை எதிர்பார்க்கிறோம். ஆனால், 2016ல் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட கூச்சல், குழப்பம் இப்போது ஏற்படாது என நம்புகிறோம். ஏனெனில், புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளின் எண்ணிக்கை, ரூ.500, ரூ.1000 நோட்டுகளைவிடக் குறைவு.
மகா குஜராத் வங்கி பொதுச் செயலாளரான ஜனாக் ரவல், "பெரும்பாலான வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவும் வேளையில், ரூ.2000 நோட்டு பரிமாற்றத்துக்காக போதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதிசெய்யும்படி மண்டல நிர்வாகிகளுக்கு நினைவூட்டியுள்ளோம்.
"அனைத்துக் கிளைகளிலும் நோட்டு எண்ணும் இயந்திரங்கள் இருப்பதை உறுதிசெய்யுமாறு வங்கி மேலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்றார்.
குஜராத் நகராண்மை கூட்டுறவு வங்கிகள் சம்மேளனத் தலைவர் ஜோதிந்திரா மேத்தா, "கூட்டுறவு வங்கி எதிலும் ரூ.2000 நோட்டுகளைப் பரிமாற்றிக்கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாது. குறைந்த மதிப்புடைய நோட்டுகள் போதுமானவை இருக்கும்," என்று சொன்னார்.
அகமதாபாத்தில் மட்டும் தனியார், பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.50 கோடி முதல் ரூ.1500 கோடி வரை ரொக்க இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நோட்டுகளை மாற்றிக்கொள்ள அடையாள ஆவணங்களைக் காட்டுவது அவசியமா என்பது பற்றிய குழப்பம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
"நோட்டுகளை மாற்றிக்கொள்ள அடையாள ஆவணங்களைக் காட்டத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது.
"ஆனால், நோட்டு பரிமாற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இணையப் பக்கத்தில் வழிகாட்டி எதுவும் இடம்பெறவில்லை," என்று அகமதாபாத்தைச் சேர்ந்த நிபுணர் ஜெய்தீப் ஸிலாகா கூறினார்.

