பள்ளி வளாகத்தினுள்ளேயே ஆசிரியரின் கார் மோதி தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சீனாவின் வூஹானில் நிகழ்ந்தது. விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் மாண்ட அம்மாணவர் ஆணா பெண்ணா என்பது தெரியவில்லை. அவரது பெயரும் வெளியிடப்படவில்லை.
சம்பவ நாளன்று, பள்ளியில் அக்குழந்தை நண்பகல் உணவு அருந்திக்கொண்டிருந்தார் என்று அவரின் தாயார் கூறியதாக உள்ளூர் ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
கீழ்த்தளத்தில் இருந்து தமது காரை ஓட்டிச் சென்ற அந்த ஆசிரியர், சக ஆசிரியருக்காகக் காத்திருக்கும் பொருட்டு வாயிலுக்குப் 10 மீட்டர் முன்னதாகவே தமது காரை நிறுத்திவிட்டார்.
அப்போது, அக்குழந்தை ஓடி வந்து அக்காருக்கு முன்னால் மண்டியிட்டு இரண்டு நிமிடங்களாக அமர்ந்திருந்ததாகவும் தம் நண்பர் வந்ததும் அந்த ஆசிரியர் காரை இயக்கியபோது அது அக்குழந்தைமீது மோதியதாகவும் கல்வி அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆசிரியர் மதுபோதையில் இருந்தாரா என்று பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர் கேள்வியெழுப்பினர். ஆனால், அந்த ஆசிரியர் காலையில் வகுப்பில் இருந்தார் என்றும் நண்பகல் உணவு வேளையில் அவர் மது அருந்தவில்லை என்றுச்ம் கூறப்பட்டது.
விபத்து தொடர்பில் இருபது வயதுகளில் இருக்கும் அந்த ஆசிரியரைக் காவல்துறை விசாரித்து வருகிறது.

