சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதிஅளித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் சிலவற்றை தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வருவதைக் குறிப்பிட்ட அவர் தமிழுக்கும் தமிழருக்குமான தம் பணி தொடரும் என்றும் தெரிவித்தார்.
அதிகாரபூர்வப் பயணமாக சிங்கப்பூர் வந்திருந்த திரு ஸ்டாலின் நேற்று காலை ஜப்பானுக்குப் புறப்படும் முன் ஒருசில சந்திப்புகளை நடத்தினார்.
சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் சுப. திண்ணப்பன் சந்தித்து பேசியபோது தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகத்தின் சிறப்பைப் போற்றியதுபோல பொருநை அருங்காட்சியகம் சிறப்புற அமைய தம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் திரு ஸ்டாலின் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் - முதல் பாகம்' புத்தகத்தை திரு சுப. திண்ணப்பனுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
முன்னதாக, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துடன் சந்திப்பு நடத்திய திரு ஸ்டாலின், இணையப் பாதுகாப்பு, வேலை தேடும் இளையர்களுக்குத் திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசியதாகத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். புதன்கிழமை நடந்த சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அமைச்சர் சண்முகம் முன்வைத்த மதுரைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமான இணைப்பு குறித்து இந்திய அரசிடம் தெரிவித்து ஆவன செய்ய முயற்சிப்பதாக நம்பிக்கை தெரிவித்தார் திரு ஸ்டாலின்.
விமான நிலையம் செல்லும் வழியில் லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் திரு ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

