அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்களின் இக்கானமிப் பிரிவுகளில் ‘எப்பிடைசர்ஸ்’ எனப்படும் பசியைத் தூண்டக்கூடிய உணவுவகைகள் பரிமாறப்படுவது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
குறைந்தது மூன்றரை மணி நேரப் பயணத்தை மேற்கொள்ளும் விமானங்களில் மட்டுமே ‘எப்பிடைசர்ஸ்’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் அவை பரிமாறப்படவில்லை.
இதற்கு விநியோகப் பிரச்சினைகளுடன் வேறு சில காரணங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குறைந்தது மூன்றரை மணி நேரப் பயணத்தை மேற்கொள்ளும் எஸ்ஐஏ விமானங்களின் இக்கானமிப் பிரிவுகளில் எப்பிடைசர்சுடன் உணவும் பரிமாறப்படும்.
பிரதான உணவுவகையுடன் ரொட்டித் துண்டு, ‘சீஸ்’ எனப்படும் பாலாடைக்கட்டி, பிஸ்கட்டுகள், இனிப்புப் பண்டங்கள் ஆகியவை பயணிகளுக்குத் தரப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.