கர்டநாடகாவின் புதிய காங்கிரஸ் அரசாங்கம் தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் முஸ்லிம் மாணவிகள் 'ஹிஜாப்' எனப்படும் தலையங்கியை அணியக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
அம்மாநிலத்தில் இதற்கு முன்பு பாஜக ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் மாணவிகள் தலையங்கி அணியக்கூடாது என்ற சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் கர்நாடகாவின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் அவற்றைத் தடை செய்ய காங்கிரஸ் அரசாங்கம் தயங்காது என்று கர்நாடகாவின் மூத்த மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"கர்நாடகாவைச் சொர்க்க பூமியாக மாற்ற தேர்தலின்போது அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். எனவே, அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் அது பஜ்ரங்தள்ளாக இருந்தாலும் சரி, மற்ற இந்துத்துவா அமைப்புகளாக இருந்தாலும் சரி, தடை விதிக்கப்படும்," என்று திரு கார்கே தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "சட்டத்தை மீறுபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் பாயும். கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டத்தைப் பற்றியோ காவல்துறையைப் பற்றியோ எவ்வித பயமின்றி சில அமைப்புகள் செயல்பட்டு வந்தன.
"தலையங்கித் தடை, பாடநூல் மறுஆய்வு உட்பட அனைத்து சட்டங்களையும் காங்கிரஸ் அரசாங்கம் மறுஆய்வு செய்யும். இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக நடைமுறைப்படுத்திய பசுவதைச் சட்டம், மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் ஆகியவையும் மறுஆய்வு செய்யப்படும்.
"இந்தச் சட்டங்கள் சர்ச்சைக்குரியவையாகவும் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது என்று கண்டறியப்பட்டால் அவை நீக்கப்படலாம்," என்றார் திரு கார்கே.

