சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள கியட் ஹொங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் நேற்றுக் காலை தீ மூண்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40 குடியிருப்பாளர்கள் அவரவர் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
கியட் ஹொங் குளோஸ் புளோக் 803ல் தீப்பிடித்ததாக காலை 10 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அந்த புளோக்கின் நான்காவது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் தீப்பிடித்து எரிந்தது.
அதனை அணைக்க கிளமெண்டி மற்றும் புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். வீட்டின் மற்ற அறைகளுக்கும் தீ பரவியதால் அங்கிருந்த பொருள் கள் கருகி சேதமடைந்தன. அந்த வீட்டில் இருந்த இருவர், தீயணைப்புப் படையினர் வருமுன்னரே வெளியேற்றப்பட்டு விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்க வீடுகளைச் சேர்ந்த 40 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
தீப்பிடித்த வீட்டைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் ஒருவர் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவக் குழுவினர் கையாண்டனர்.
இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார். அந்த வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

