தெங்கா வட்டாரத்தில் 'பிடிஓ' எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் நாளை விற்பனைக்கு விடப்படவுள்ளன.
பார்க் மெடோ அட் தெங்கா, பிளான்டேஷன் வெர்ஜ் எனும் இரண்டு குடியிருப்புகளின்கீழ் ஏறக்குறைய 3,000 வீடுகள் தெங்காவில் விற்பனைக்கு விடப்படும்.
அவற்றுக்கான காத்திருப்பு காலம் நான்கு ஆண்டுகளுக்குக் குறைவு என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்தது.
தெங்கா வட்டார வீடுகளையும் சேர்த்து நாளை கிட்டத்தட்ட 5,500 வீடுகள் விற்பனைக்கு அறிவிக்கப்பட உள்ளன.
மற்ற வீடுகள் பிடோக், சிராங்கூன், காலாங்/வாம்போ ஆகிய வட்டாரங்களில் அமையவிருக்கின்றன.
பார்க் மெடோ அட் தெங்காவில் ஏறத்தாழ 2,000 வீடுகள் கட்டப்படும். அவற்றுக்கான காத்திருப்பு காலம் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள்.
2030ஆம் ஆண்டு ஆங்கிலோ-சீனத் தொடக்கப் பள்ளி இடம் மாறும்போது அந்தக் குடியிருப்பு அப்பள்ளியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கும்.
பிளான்டேஷன் வெர்ஜ் குடியிருப்புக்கு அருகே பிள்ளைப் பராமரிப்பு நிலையம், புக்கிட் பாத்தோக் நகர மையம் ஆகியவை அமைந்திருக்கும் என்று வீவக கூறியது.
அக்கம்பக்க நிலையம், சமூக மன்றம், புதிதாகக் கட்டப்படும் பள்ளிகள், பேருந்து முனையம், எம்ஆர்டி நிலையம் ஆகியவையும் அருகில் அமைந்திருக்கும்.
இவ்விரு குடியிருப்புகளையும் சேர்த்து 2018க்குப் பிறகு இதுவரை மொத்தம் 21,000 வீடுகள் தெங்காவில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

