அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவது இல்லை என்று திருவாட்டி ஹலிமா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.
“மிகவும் கவனத்துடன் பரிசீலித்த பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த ஆறாண்டு காலமாக சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகச் சேவையாற்ற எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்.
“அதிபராகப் பணியாற்றிய அனுபவம் ஊக்கம் நிறைந்ததாகவும் எளிமையைக் கடைப்பிடிக்கக்கூடியதாகவும் அமைந்தது.
“அதிபர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதை 2017ஆம் ஆண்டு பதவி ஏற்றபோது உணர்ந்தேன். அத்தகைய பொறுப்புகளை நிறைவேற்ற என்னால் இயன்ற அளவுக்கு முயன்றேன்.
“இரக்கமும் அரவணைப்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்க உதவுவது எனது நோக்கமாக இருந்தது. எனது நோக்கத்தைப் பகிர்ந்து ஏராளமான சிங்கப்பூரர்கள் எனக்கு ஆதரவு வழங்கி என்னுடனே பயணம் செய்தார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். நமது சமூகங்களின் குரலை உரக்க ஒலித்தோம். தேவையுள்ளோரின் வாழ்க்கையை கைதூக்கிவிட்டோம். குறிப்பாக, நம்மிடையே உள்ள வசதிகுறைந்தோருக்கும் எளிதில் பாதிப்படையக்கூடியவருக்கும் உதவினோம்.
“கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்த சிங்கப்பூரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவ்வாறு ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றயதன் விளைவாக நமது நாடு இப்போதிருக்கும் நிலைக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடிந்தது.
“அனைத்துலக ரீதியில் இருதரப்பு உறவை வலுப்படுத்த சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பல வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்தேன். அவர்கள் நமது சிறந்த ஆட்சிமுறையைப் புகழ்ந்ததோடு சிங்கப்பூர் மீது மதிப்பையும் வெளிப்படுத்தினார்கள்.
குறிப்பாக, வலுவான சமூக ஒற்றுமையையும் நமது பல இன, பல சமய சமூகத்தையும் அவர்கள் பாராட்டினார்கள். அதிபர் பொறுப்பு என்பது சிங்கப்பூரின் ஜனநாயகத்தில் ஆக உயர்ந்த, முக்கிய இடத்தை வகிக்கிறது. மக்கள் பகிர்ந்துகொண்ட நன்மதிப்பையும் விருப்பங்களையும் உருவகப்படுத்தி ஒற்றுமை தேசமாக நாட்டை உருவாக்கக்கூடிய பொறுப்பு அது.
“அதிபரின் ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்பது சிங்கப்பூரின் எதிர்காலத்தைக் காக்கும் பொருட்டு அரசாங்கத்துடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றக்கூடியது. நாட்டின் வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக அது எப்போதும் விளங்கி வருகிறது. அத்துடன், நிச்சயமற்ற, குழப்பமான உலகில் நமது பாதையை வகுக்கும் நேரத்தில் அப்பொறுப்பு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
“சிங்கப்பூரின் அதிபர் என்ற முறையில் இனம், மொழி அல்லது சமூகநிலை என்ற பேதமின்றி எல்லா சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றக்கூடிய வாய்ப்புப் பெற்றது எனக்குக் கிடைத்த பெரும்பேறு.
“எனது பதவிக்காலத்தில் நான் பெற்ற அனுபவங்கள் என் மனதில் எப்போதும் நிழலாடும். நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் என்னால் இயன்ற காலம் வரை தொடர்ந்து பங்களிக்க இந்த அனுபவங்கள் எனக்கு ஊக்கமளிக்கும். பதவிக்காலம் முழுவதும் எனக்கு இடைவிடாத ஆதரவு அளித்த எனது குடும்பத்துக்கும் எனது கணவருக்கும் இந்த நேரத்தில் நன்றிசொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்,” என்று திருவாட்டி ஹலிமா தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருவாட்டி ஹலிமா கடந்த 2017 செப்டம்பர் 14ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் அவர் என்பது குறிப் பிடத்தக்கது.
அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவிப்பு