மணிப்பூரில் குக்கி, நாகா இன மக்கள் பழங்குடியினராக உள்ளனர். மைத்தேயி இன மக்கள், தங்களை பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். இதற்கு ஆதரவாக மணிப்பூர் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனால் குக்கி, நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை வெடித்தது.
இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற கலவரத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மூன்று வாரங்கள் ஆன நிலையில் வன்முறையும் பதற்றமும் மணிப்பூரில் நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பெரிதாக வெடித்த வன்முறையில் பொதுமக்களில் அறுவரும் காவல்துறையினரில் இருவரும் கொல்லப்பட்டனர்.
ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த சனிக்கிழமை முதல் முகாமிட்டு இருக்கும் நிலையிலும் வன்முறை ஓயவில்லை.
அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சென்றடைந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்று மணிப்பூர் விரைந்தார்.
இதற்கிடையே, கடந்த 4 நாள்களில் 40 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டதாக மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறினார்.

