ஐந்தாண்டு காலம் பலமுறை அடகு வைத்து $2.3 மி. பெற்றார்
சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயில் நகைகளை அடகுவைத்த குற்றத்திற்காக கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு நேற்று ஆறாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கந்தசாமி சேனாபதி, 39, (படம்) எனப்படும் அவர், கிட்டத்தட்ட $2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகைக்கு கோயில் நகைகளை மீண்டும் மீண்டும் அடகு வைத்தது கணக்குத் தணிக்கை நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கையாடல் செய்து நயவஞ்சகமாக நடந்துகொண்டதன் மூலம் நம்பிக்கை மோசடி செய்த இரு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சேனாபதி ஒப்புக்கொண்டார். இதர ஆறு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்திய நாட்டவரான சேனாபதி, ஸ்ரீமாரியம்மன் கோயில் அர்ச்சகராக 2013 டிசம்பர் மாதம் இந்து அறக்கட்டளை வாரியத்தால் சேவையில் அமர்த்தப்பட்டார். அவர் தமது தலைமை அர்ச்சகர் பொறுப்பில் 2020 மார்ச் 30ஆம் தேதி வரை இருந்தார்.
குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட தால் அந்தத் தேதியில் அவர் தமது பொறுப்புகளில் இருந்து விலகினார்.
தொடக்கத்தில் தலைமை அர்ச்சகருக்கு அடுத்தநிலையில் இருந்த சேனாபதி, தலைமை அர்ச்சகர் ஓய்வுபெற்றதும் 2018 ஜூலையில் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் 2014ஆம் ஆண்டிலேயே கோயிலின் கருவறையில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தின் ரகசிய எண்ணும் அதற்கான சாவிகளும் நம்பிக்கையின் அடிப்படையில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
அந்தப் பெட்டகத்தில் கோயிலுக்குச் சொந்தமான 255 தங்க நகைகள் இருந்தன. அவற்றின் புத்தக மதிப்பு கிட்டத்தட்ட S$1.1 மில்லியன்.
சிறப்புப் பூசைகள் மற்றும் விழாக்காலங்களின்போது விக்கிரங்களுக்கு அணிவிக்கப்படும் நகைகளை மீண்டும் பத்திரமாக பெட்டகத்தில் சேர்க்கவேண்டிய பொறுப்பு அவருடையதாக இருந்தது. அந்தப் பெட்டகத்தைக் கையாளக்கூடிய ஒரே நபராக சேனாபதி இருந்தார்.
2016ஆம் ஆண்டு முதல் கோயில் நகைகளை அடகு வைப்பதும் பின்னர் மேலும் சில நகைகளை அடகு வைத்து முதலில் வைத்த நகைகளைத் திருப்புவதுமாக இருந்தார் அவர்.
2016ஆம் ஆண்டில் மட்டும் 172 தடவை அவ்வாறு செய்தார். 66 நகைகளை அவர் அடகு வைப்பதும் அவற்றை மீட்பதுமாக இருந்தார்.
அவரது இந்தச் செயலை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. எனவே, கோயில் நகைகளை அடகு வைப்பதை 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார். அடகு வைத்த நகைகளை கோயிலில் கணக்குத் தணிக்கை நடைபெறுவதற்கு சில நாள்கள் முன்னதாக திரும்பக் கொண்டு வந்து அவர் வைத்துவிடுவார்.
தணிக்கை முடிந்ததும் மீண்டும் அவற்றை அடகு வைப்பார். 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை S$2,328,760 அளவுக்கு நகைகளை அடகு வைத்தார்.
தமது வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்ட தொகையில் கிட்டத்தட்ட S$141,000 மதிப்புள்ள பணத்தை இந்தியாவுக்கு அனுப்பினார்.
2020 மார்ச்சில் கோயிலில் கணக்குத் தணிக்கைத் திட்டமிடப்பட்டது. ஆயினும், கொவிட்-19 காரணமாக அது தள்ளிப்போடப்பட்டு ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கு முன்னதாக, 2020 ஜூனில் நகைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் சாவி தம்மிடம் இல்லை என்றும் இந்தியா சென்றபோது சாவியை அங்கேயே வைத்துவிட்டு வந்ததைப்போலத் தெரிவதாகவும் கோயில் நிதிக் குழு உறுப்பினர் ஒருவரிடம் சேனாபதி கூறினார்.
ஆனாலும், திட்டமிட்ட தேதிகளில் தணிக்கை நடத்தப்படும் என்றும் பெட்டகம் தணிக்கைக்காக வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட வேண்டி இருக்கும் என்றும் அந்த உறுப்பினர் பதிலளித்தார்.
நிலைமை சிக்கலாவதை உணர்ந்த சேனாபதி, நகைகளை தாம் அடகு வைத்திருப்பதாக 2020 ஜூலை 2ஆம் தேதி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 2020 ஜூலை 29ஆம் தேதி அவர்மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் சேனாபதியைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் மோகன்தாஸ் நாயுடு வாதாடினார். நகைகளை சேனாபதி அடகு வைத்ததன் நோக்கம் என்ன என்று நீதிபதி ஷைஃபுதின் சருவான் வினவினார்.
அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர், இந்தியாவில் உள்ள தமது நண்பர்களுக்கு, குறிப்பாக நண்பர் ஒருவரின் தாயாரின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவ பணம் தேவைப்பட்டதால் சேனாபதி அவ்வாறு செய்யத் தொடங்கியதாக வும் கூறினார். இவ்வாறு தொடங்கிய அவரது செய்கை பின்னாளில் கையைமீறிப்போனதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நம்பிக்கை மோசடிக் குற்றத்திற்கும் சேனாபதிக்கு 15 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.