ஈசூன் அவென்யூ 11ல் உள்ள புளோக் 436க்கும் புளோக் 438க்கு இடைப்பட்ட பொது இடத்திலும் புல்வெளியிலும் மே 22ம் தேதி அன்று மாலை 6 மணியளவில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்த அல்லது மயங்கிய நிலையில் கிடந்ததை திருவாட்டி ஆய்லிஷா கண்டார். அந்த இடத்தைச் சுற்றி சில குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்ததையும் அவர் பார்த்தார்.இரவு 10 மணிக்கு புறாக்கள் அங்கேயே இருப்பதைக் கண்ட அவர் 'ஏக்கர்' எனப்படும் விலங்கு நல ஆய்வு, கல்வி அமைப்பை அழைத்தார். ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த அமைப்பினர் இறந்த பறவைகளை அப்புறப்படுத்தியதுடன் ஏழு புறாக்களுக்கு சிகிச்சையளித்தனர்.
ஈசூன் குடியிருப்பாளரான அவர் இந்த விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். இது குறித்து அவர் நீ சூன் நகர மன்றத்திற்கு எழுதினார். திருவாட்டி ஆயிஷாவுக்கு மன்றம் அனுப்பிய பதில் மின்னஞ்சலில், இது புறா கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் இறந்த புறாக்கள் உரிய நேரத்தில் அகற்றப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்தும் எழுதியிருந்தது.
புறாக்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கும் குடியிருப்பாளர்களின் மாறுபட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும் புறாக் கழிவுகளில் உள்ள பாக்டீரியாக்களால் நோய்வாய்ப்படாமல் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்கும் துடிப்பான, சீரான அணுகுமுறையைக் கைக்கொள்வதாக ஸ்ட்ரெய்ஸ்ட் டைம்சிடம் நகர மன்றப் பேச்சாளார் கூறினார்.
பறவைகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஆல்பா குளோரோலோஸ் (ஏசி) அவற்றுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றார் ஏக்கர்ஸின் இணை தலைமை நிர்வாகியான அன்பரசி பூபால். இது உணவில் கலந்துகொடுக்கப்படுகிறது. கடந்த ஈராண்டுகளில் விஷம் வைக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட பறவைகளைத் தமது அமைப்பு காப்பாற்றி உள்ளதாகவும் ஸ்ட்ரெய்ஸ்ட் டைம்சிடம் கூறினார்.
புறாக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏசி உபயோகிப்பதை நிறுத்துமாறு நகர மன்றங்களிடம் லாப நோக்கமற்ற அமைப்பான ஏக்கர்ஸ் கேட்டு வருகிறது.
இப்படிச் செய்வது மனிதாபிமானமற்றது, பயனற்றது மட்டுமல்ல, அதை எந்த விலங்கு சாப்பிட்டாலும் பாதிப்பு ஏற்படும்.
பறவைகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு உணவு கிடைக்கும் வழிகளைக் கட்டுப்படுத்துவது ஒரு நல்ல வழிமுறை என்றும் திருவாட்டி அன்பரசி குறிப்பிட்டார்.

