அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு விழாவைக் காணக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் உறுதியைச் சோதித்தது, சோவெனப் பெய்த கனமழை.
நேற்றுக் காலை 8 மணியளவில் மழை பெய்தபோது ஆலயத்தின் முன்பு அமர்ந்தும் நின்றும் இருந்த பக்தர்கள், ஆலயத் தொண்டர் கொடுத்திருந்த வண்ண மழையங்கிகளை அணிந்தனர்.
அப்போது பல்வேறு வண்ணங் களுடன் காணப்பட்டது கிட்டத் தட்ட ஒரு மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்ட கோயில் கட்ட டம் மட்டுமல்ல. ஊனுடம்பு ஆலயங்களாகத் திகழ்ந்த பக்தர் கூட்டம் பல வண்ணக் கடல் போலத் தோற்றமளித்தது.
கோயிலின் 75 அடி உயர கோபுரத்தின் மீது சிவாச்சாரியர்கள் ஏறி யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட நன்னீரை காலை 9.15 மணிக்கு ஊற்றியதைச் சுமார் 12,000 பக்தர்கள் மழை நீரில் நனைந்தபடியே கண்டுகளித்தனர்.
கோயிலின் மூலவரான தெண்டாயுதபாணி பெருமானின் சன்னதி மீதுள்ள 28 அடி உயர சிறிய கோபுரங்களுக்கும் 12 அடி உள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சன்னதி களின் சிறிய கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் 2ஆம் சட்ட அமைச்சருமான எட்வின் டோங் ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர். பின்னர் சுமார் 11 மணி அளவில் பக்தர்கள் வரிசையாக சென்று இறை தரிசனம் செய்தனர். வான்மழையுடன், பிரபல செவ்விசைப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரமும் பன்னிரண்டு இசைக்கலைஞர்களும் வந்திருக்கும் பக்தர்கள் மீது இசைமழை பொழிந்தனர்.
சிங்கப்பூரில் பணிபுரியும் பத்து சிவாச்சாரியார்களுடன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 46 சிவாச்சாரியர்களும் இணைந்து பணியாற்றினர்.
‘சிவஸ்ரீ அண்ணா’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் பிச்சை குருக்கள், இக்குடமுழுக்கு விழாவை ‘சர்வசாதகம்’ என்ற தலைமைப் பொறுப்பில் வழி நடத்தினார். சிற்பிகள் 15 பேரும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப் பட்டனர்.
கோயில், ஒட்டுமொத்தமாக நேற்று கிட்டத்தட்ட 30,000 பக்தர் களுக்குத் தனது மணிக்கதவு களைத் திறந்தது. முதியோர், சக்கர நாற்காலியில் வந்திருந்தோர் உள்ளிட்ட பலர், குட முழுக்கை அமர்ந்தபடியே காணும் வசதியை ஆலயம் ஏற்படுத்தி யிருந்தது. இப்பெரும் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 1,000 தொண்டூழியர்கள் ஆலய வளாகத்தைச் சுற்றி இருந்து பக்தர் களுக்கு வழிகாட்டினர்.
பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக 1,000 இருக்கை களுக்கான இடவசதி உடைய கூடாரம் ஒன்று ‘இயூஇ ஸ்குவேர்’ கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் அமைக் கப்பட்டது. சாதம், வெஜிடபிள் பிரியாணி, சுவையான காய்கறிகள், பாயசம், அப்பளம் என பலவகை உணவு இரண்டு நாள் பரிமாறப்பட்டன.
இந்நிலையில் பிரதமர் லீ சியன் லூங் இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டபோதும் அவருக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதால் அவரால் வருகை அளிக்க முடியவில்லை.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் 8வது திருக்குட முழுக்கைக் காண ஆவலுடன் காத்திருந்த போதும் மற்றவர்களின் பாதுகாப்புக் கருதி நான் இதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது,” என்று சமூக ஊடக பதிவு களில் பிரதமர் லீ குறிப்பிட்டு உள்ளார்.
ஈராண்டுக்கு நீடித்த தயாரிப்புப் பணிகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு வெற்றிகரமாக நடந்தேறியதாக இக்கோயிலை நிர் வகிக்கும் செட்டியார் கோயில் குழுமத் தலைவர் எம். சாமிநாதன், 60, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.