சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பசுமைப் பொருள்கள், சேவை வழங்க S$17.8 மி.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உறவை மேலும் வலுப்படுத்த பல முயற்சிகள் இடம்பெறும்.
பசுமை நிறுவனங்களுக்கு ஆதரவாக உதவும் புதிய நிதி, மின்னிலக்க கடல் போக்குவரத்து வழித்தடம், உணவு வர்த்தகத்திற்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் ஆகியவை அந்த முயற்சிகளில் உள்ளடங்கும்.
இரு நாடுகளையும் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சேர்ந்து செயல்பட்டு புதுப்புது பசுமைப் பொருள்களை உருவாக்கவும் சேவைகளை வழங்கவும் உதவும் வகையில் A$20 மில்லியன் (S$17.8 மில்லியன்) நிதி தொடங்கப்பட்டுள்ளது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு வர்த்தகத் துறையும் அந்த நிதியைச் சரிசமமாக வழங்கும். இரு நாடுகளையும் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா பசுமை, மின்னிலக்க கப்பல் போக்குவரத்து வழித்தடம் 2025ஆம் ஆண்டு முடிவில் ஏற்படுத்தப்படும்.
கப்பல் போக்குவரத்து தொழில்துறையில் கரிமக்கழிவை அகற்றுவதும் அந்தத் துறையை மின்னிலக்கமயப்படுத்துவதும் நோக்கம். இதன் தொடர்பில் இருநாட்டு அதிகாரிகளும் சேர்ந்து செயல்படுவர்.
புதிய திட்டங்கள் சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா தலைவர்களின் எட்டாவது ஆண்டு சந்திப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கூட்டம் இஸ்தானாவில் நேற்று நடந்தது.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா பரந்த உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டின்கீழ் இடம்பெறும் இருதரப்பு தலைவர்களின் சந்திப்பு ஏற்பாட்டின்படி, இரு நாடுகளின் பிரதமர்கள் சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கிறார்கள். வட்டார, அனைத்துலக நிலவரங்கள் பற்றி அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசும் தற் காலிக பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நேற்று இஸ்தானாவில் சந்தித்தனர். பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.
ஆஸ்திரேலிய பிரதமர் மூன்று நாள் வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார். அவர் நேற்று தொடங்கிய 20வது ஷங்ரிலா மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிகப் பிரதமர் திரு வோங், கரிமக்கழிவு இல்லாத பசுமை எதிர்காலத்தை உருவாக்குவதிலும் பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பின் மீள்திறனைக் கட்டிக்காப்பதிலும் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் தெள்ளத்தெளிவான நோக்கங்களைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் இப்படி சேர்ந்து செயல்படுவதால் இரு தரப்புகளையும் சேர்ந்த தனியார் துறைகள் ஒத்துழைக்க பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றாரவர்.
இதில் அரசாங்கங்கள் மட்டும் சேர்ந்து செயல்படுவது போதாது என்றும் தனியார் துறைகளின் பங்கு மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா பசுமைப் பொருளியல் உடன்பாடு சென்ற ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. அதன்படி 17 கூட்டு முயற்சிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன.
இஸ்தானாவில் விவாதிக்கப்பட்ட புதிய செயல்திட்டங்கள் அந்தக் கூட்டு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

