இந்தியாவில் மோசமான ரயில் விபத்து; பிரதமர் மோடி நேரில் ஆய்வு; உயர்மட்ட அளவில் விசாரணை
இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட மோசமான விபத்தில் குறைந்தது 288 பேர் மாண்டுபோயினர்; 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரிலிருந்து கோல்கத்தா நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் ஆகியவை தொடர்புடைய இவ்விபத்து ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் அருகே நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நிகழ்ந்தது.
கோரமண்டல் ரயில் தவறான தடத்திற்குத் திரும்பி, அதில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் அதன் பெட்டிகள் தடம்புரண்டு, இன்னொரு தடத்தில் விழுந்ததாகவும் அப்போது, எதிர்த்திசையில் வந்த அதிவிரைவு ரயில் அப்பெட்டிகள்மீது மோதியதாகவும் சொல்லப்படுகிறது.
ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சில ரயில் பெட்டிகள் ஒன்றின்மேல் ஒன்றாகக் கவிழ்ந்திருந்ததால் பெட்டிகளை வெட்டித்தான் உள்ளிருந்தோரை மீட்க முடிந்தது. மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் மாண்டோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, “விபத்திற்குக் காரணமானோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்,” என்றார்.
பின்னர், விபத்தில் காயமுற்று கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு நேரில் ஆறுதல் கூறினார் திரு மோடி.
மாண்டோரின் குடும்பத்தாருக்கும் காயமடைந்தோருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.
விபத்து குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.
விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் 90 ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன; 49 ரயில் சேவைகள் வேறு வழிகளில் இயக்கப்பட்டன.
ஒடிசா, தமிழ்நாடு மாநிலங்கள் நேற்று அரசுமுறை துக்கம் கடைப்பிடித்தன. தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் இருவரும் ஒடிசா சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அழைத்துச்செல்லசென்னையிலிருந்து புவனேஸ்வருக்கு நேற்றிரவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.