நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்குச் சொந்தமான 27 சந்தை, உணவங்காடி நிலையங்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணங்கள் அடுத்த ஆண்டு இருமுறை உயர்த்தப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், மக்கள் செயல் கட்சி நகர மன்றங்களின்கீழ் செயல் படும் கடைகள், அலுவலகங்கள், சந்தைகள், உணவங்காடி நிலையங்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணம் உயர்த்தப் படும் என்று இருநாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், 2024 ஜனவரி மாதத்தில் முதற்கட்ட சேவை, பராமரிப்புக் கட்டண உயர்வு இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. அதன்படி, சந்தை, உணவங்காடி நிலையங்களில் செயல்படும் கடைகளுக்கான மாதக் கட்டணம் $4 முதல் $15 வரை உயரும். சமைத்த உணவு விற்கும் கடைகளுக்கான கட்டணம் $140லிருந்து $155 ஆக உயரும். சில்லறை விற்பனைக் கடைகளுக்கான கட்டணம் $8 கூடி, $87ஆக இருக்கும். காய்கறி, முட்டை, மணமூட்டிகள் உள்ளிட்ட சந்தைப் பொருள்களை விற்கும் கடைகளுக்கான சேவை பராமரிப்புக் கட்டணம் $4 உயரும். இறைச்சி, கடல் உணவு, பழங்கள், பதப்படுத்தப் பட்ட, உலர்ந்த பொருள்கள் விற்கும் கடைகள் கூடுதலாக $6 செலுத்த வேண்டியிருக்கும்.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது கட்டண உயர்வு நடப்பிற்கு வரும். அப்போது கட்டணம் $6 முதல் $20 வரை அதிகரிக்கும்.
சேவை, பராமரிப்புக் கட்டணமானது சந்தை, உணவங்காடி நிலையங்களை முறையாக நிர்வகித்து நடத்தவும் அவற்றைப் பராமரிக்க ஆகும் செலவை ஈடுசெய்யவும் பயன்படுத்தப் படுகிறது என்றும் வாரியம் குறிப்பிட்டது.