இருநாடுகளுக்கும் இடையிலான பூசல்களைத் தீர்க்க சீனாவிற்கு அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து பொறுப்புள்ள தற்காப்புத் தலைவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் சீனாவை வலியுறுத்தி இருக்கிறார்.
"பொறுப்புள்ள தற்காப்புத் தலைவர்களைப் பொறுத்தமட்டில், பேச்சுவார்த்தைக்கு எப்பொழுதும் நற்பொழுதுதான்," என்றார் திரு ஆஸ்டின்.
"எல்லா நேரமும் பேச்சுவார்த்தை நடத்த சரியான நேரம்தான். பேச்சுவார்த்தைக்குத் தற்பொழுதே நற்பொழுது. பேச்சுவார்த்தை என்பது வெகுமதியன்று. அது ஒரு தேவை," என்றார் அவர்.
சிங்கப்பூரில் நடந்துவரும் ஷங்ரிலா மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று உரையாற்றியபோது திரு ஆஸ்டின் இவ்வாறு குறிப்பிட்டார்.
வலுவான தற்காப்பு ஈடுபாட்டிற்குச் சீனா தயாராக இல்லாதது குறித்துக் கவலையை வெளிப்படுத்திய அவர், நிலைமை விரைவில் மாறலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"வல்லரசு நாடுகள் என்பவை, வெளிப்படைத்தன்மையின், பொறுப்புடைமையின் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். அமெரிக்கா தனது பங்கை ஆற்ற மிகுந்த கடப்பாட்டுடன் உள்ளது.
"இந்த வட்டாரத்தை அமைதியாகவும் செழிப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது," என்று திரு ஆஸ்டின் கூறினார்.
அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் வகையில், தகவல் தொடர்பை வலுப்படுத்துவது உட்பட இடர்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், தற்காப்பு தொடர்பில் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பை சீனா ஏற்க மறுத்துவிட்டது.
சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபுமீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொள்ளாத வரையிலும் பேச்சுவார்த்தை இடம்பெற வாய்ப்பில்லை என்று மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருதரப்பும் சமமான நிலையில் இருக்கும்போதுதான் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு உகந்த சூழல்களை உருவாக்க வேண்டியது அமெரிக்காவின் கைகளில்தான் இருக்கிறது என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தைவான் விவகாரத்தால் அண்மைக்காலமாக இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிலும் தைவானிலும் உள்ள சில குழுக்கள் தைவானைச் சுதந்திர நாடாக அறிவிக்க முயல்வதாக சீனா நம்புகிறது.
ஆனால், தைவானுக்குள் சீனா ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில் அத்தீவிற்கு ஆயுதம் மட்டுமே வழங்கி வருவதாக அமெரிக்கா கூறுகிறது.

