ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வதாக அமெரிக்கா நீண்டகாலமாகவே குற்றம் சுமத்தி வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா கலந்துரையாடலில் சீனாவின் நிலைப்பாட்டை அதன் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு முன்வைத்தார்.
எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சீனாவின் விருப்பம் என்றார் அவர். ஆனால் அமெரிக்கா அதன் வலிமையைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை ஆட்டிவைப்பதாக அவர் சாடினார்.
அதுமட்டுமல்லாது, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நிலவும் அமைதியான சூழலை அமெரிக்கா கெடுப்பதாகவும் அவர் குறைகூறினார்.
அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் அது மற்ற நாடு
களைக் கட்டாயப்படுத்தி அது நிர்ணயிக்கும் வழியில் செல்லவும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் செய்வதாக ஜெனரல் லீ கூறினார்.
ஆசியப் பாதுகாப்புக் கருத்தரங்கின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கில் ஆசிய பசிபிக் வட்டாரம் மற்ற நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் ஜெனரல் லீயும் ஒருவர். கருத்தரங்கில் அமெரிக்க-சீனா உறவு, உக்ரேன்-ரஷ்யா போர், தென்சீனக் கடல் விவகாரங்கள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
பனிப்போர் மனிப்பான்மை மீண்டும் உலகில் தலைதூக்குவதாக அவர் தெரிவித்தார். அத்துடன் நாடுகளுக்கிடையிலான பூசல்களும் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். ஆசிய பசிபிக் வட்டாரம் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நிலவும் அமைதியான சூழலை யார் கெடுக்கிறார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. பூசல்கள், குழப்பங்கள், நிலையற்றதன்மைக்கு எவை முக்கிய காரணங்கள்? எதை எதிர்த்து விழிப்புடன் இருக்க வேண்டும்?" என்று கருத்தரங்கில் பேசியபோது திரு லீ கேள்வி எழுப்பினார்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆசிய பசிபிக் வட்டாரம் பாதுகாப்புச் சவால்களை எதிர்நோக்குவதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அணுக்கமான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை மேம்படுத்த சீனா தயாராக இருப்பதாக அவர் கூறினார். இந்தப் பங்காளித்துவம் நியாயமானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பாக சீனா கொண்டிருக்கும் இலக்கு பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதைமிக்கதாக இருக்கும் என்றார் ஜெனரல் லீ. கருத்தரங்கிற்காக சிங்கப்பூர் வந்திருக்கும் ஜெனரல் லீயுடன் சந்திப்பு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. ஆனால், ரஷ்யாவிட
மிருந்து ஆயுதங்கள் வாங்கு
வதைச் சுட்டிக்காட்டி தம்மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி அமெரிக்கா விடுத்த அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

