ஆசியாவில் போர் வெடிக்காமல் இருப்பதே அடுத்த சில ஆண்டு
களுக்கு முக்கிய இலக்காக இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தெரிவித்தார்.
"ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஒரே நேரத்தில் போர் மூண்டால் உலக மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனும் கருத்தைப் பலர் ஏற்பர். ஆனால் உண்மை நிலவரம், புவிசார்ந்த அரசியல் நிலவரம் இதனுடன் வேறுபடுகிறது," என்று ஷங்ரிலா கலந்துரையாடலில் டாக்டர் இங் கூறினார். தென்சீனக் கடல், தைவான் நீரிணை விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நிகழும் அபாயம் இருந்ததை டாக்டர் இங் சுட்டினார்.
இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாகப் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அமைச்சர் எச்சரித்தார்.
எனவே, அமெரிக்காவும் சீனாவும் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணத் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர். நேற்று முன்தினம் தைவான் நீரிணையில் சென்றுகொண்டிருந்த அமெரிக்கப் போர் கப்பலுக்கு 50 மீட்டர் தூரத்தில் சீனப் போர்க் கப்பல் சென்றது.
அதற்குச் சில நாள்கள் முன்பு தென்சீனக் கடலுக்கு மேல் சென்றுகொண்டிருந்த அமெரிக்கக் கண்காணிப்பு விமானத்தை சீனப் போர் விமானம் வழி மறித்தது. ஆசியாவின் நிலைத்
தன்மைக்கு அமெரிக்கா-சீன உறவு மிகவும் முக்கியம் என்பதை டாக்டர் இங் வலியுறுத்தினார். நெருக்கடி நேரம் வரும் வரை காத்திருந்தால் இருநாடுகளுக்கு இடையிலான உறவைச் சரிசெய்ய முடியாமல் போய்விடும் என்றார் அவர்.

