கிராஞ்சியில் வீடமைப்பு, இதர மேம்பாடுகளுக்கு வழிவிடுகிறது
கிராஞ்சியில் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் (சிங்கப்பூர் டர்ஃப் கிளப்) அமைந்திருக்கும் நிலம், 2027 மார்ச் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும். வீடமைப்பு, இதர மேம்பாடுகளுக்கு அந்த இடம் வழிவிடுகிறது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உட்லண்ட்ஸ் வட்டாரத்தையும் மேம்படுத்துவது, லிம் சூ காங் வட்டாரத்தை உயர் தொழில்நுட்ப வேளாண் உணவுக் குழுமமாக உருமாற்றுவது உள்ளிட்டவை மேம்பாட்டுத் திட்டங்களில் அடங்கும்.
இதன்மூலம், சிங்கப்பூரில் 180 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்துள்ள குதிரைப் பந்தயம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அப்பந்தயத்தைப் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்து வந்து உள்ளது.
இதன் தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா, “இந்த முடிவு எளிதான ஒன்றல்ல என்றாலும் தேவையான ஒன்று. நிலத்துக்கான தேவை அதிகரித்து வந்துள்ளது. அதன் பொருட்டு, நிலப் பயன்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் அப்போதைக்கு அப்போது மறுஆய்வு செய்கிறது.
“ஏனெனில், சிங்கப்பூரர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வளங்கள் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் விரும்புகிறோம்,” என்று விவரித்தார்.
ஏறக்குறைய 120 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் நிலம், ஏறத்தாழ 200 காற்பந்துத் திடல்கள் அளவுக்குச் சமம். கரையோரப் பூந்தோட்டத்தைவிட இது பெரியது.
2024 அக்டோபர் 5ஆம் தேதி கடைசி குதிரைப் பந்தயம் நடைபெறும். 2027 மார்ச் மாதத்திற்குள் அந்த வளாகம் மூடப்படும்.
நிதி அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், “சிங்கப்பூர் குதிரைப் பந்தய இடத்தை மறுமேம்பாட்டிற்கு விடுவது தொடர்பான முடிவு, எதிர்காலத் தேவைகளுக்கு அந்த நிலத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் முழுமையாகத் திட்டமிட வகைசெய்யும்,” என்று குறிப்பிட்டன.
வீடமைப்பு ஒருபுறமிருக்க, பொழுதுபோக்கு, கேளிக்கை உள்ளிட்ட மற்ற பயன்பாடுகள் குறித்தும் தேசிய வளர்ச்சி அமைச்சு ஆராய்கிறது.
சிங்கப்பூரில் தொடர்ந்து இயங்கும் எண்ணம் கொண்டுள்ள குதிரை சவாரி சேவை வழங்கும் அமைப்புகளின் தேவைகளை தான் கருத்தில்கொள்வதாகவும் அமைச்சு கூறியது.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்ற ஊழியர்கள், 2024 அக்டோபரில் இருந்து கட்டங்கட்டமாக ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று இரு அமைச்சுகளும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டன.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் ஏறக்குறைய 350 பேர் பணிபுரிகின்றனர். ஆட்குறைப்புத் தொகுப்புத் திட்டம், ஆலோசனை, வேலை நியமன உதவி, தனிப்பட்ட வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி, திறன் பயிற்சித் திட்டங்கள் வடிவில் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்ற ஊழியர்கள் அல்லாத பந்தயக் குதிரை பயிற்றுவிப்பாளர்களுக்கு குதிரைகளைப் பராமரிக்கவும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆதரவு அளிக்கப்படும்.
2024 அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் கடைசி குதிரைப் பந்தயத்தைத் தொடர்ந்து, குதிரைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடங்கும். 2026 மார்ச் மாதத்திற்குள் அந்த ஏற்பாடு நிறைவுபெறும்.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் தற்போது ஏறக்குறைய 700 பந்தயக் குதிரைகள் உள்ளன. மேலும், அங்கு 38 குதிரைகள் செல்லப்பிராணிகளாக பராமரிக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தின் மரபுடைமையையும் உள்ளூர் குதிரைப் பந்தயத்தையும் அனுசரிக்க பந்தயப் பிடிப்புக் கழகம், சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம், இதர பங்குதாரர்களுடன் சேர்ந்து அரசாங்கம் பணியாற்றும்.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் தற்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 550 பந்தயங்களை நடத்துகிறது. வாரத்துக்கு ஒரு பந்தய நாள் இடம்பெறுகிறது. அன்றைய தினத்தில் 10 முதல் 13 பந்தயங்கள் வரை நடைபெறுகின்றன.
2010க்கும் 2019க்கும் இடையே, பந்தய நாளில் கலந்துகொண்டோரின் சராசரி எண்ணிக்கை 11,000லிருந்து 6,000ஆகக் குறைந்ததாக குதிரைப் பந்தய மன்றம் தெரிவித்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு 2022 ஏப்ரலில் பந்தயத் திடல் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 2,600ஆகச் சரிந்தது.
ஒவ்வொரு குதிரைப் பந்தயம் மூலமும் ஏறக்குறைய $400,000 வருவாய் கிடைப்பதாக குதிரைப் பந்தய மன்றத்தின் தலைவர் நியாம் சியாங் மெங் தெரிவித்தார். தற்போது ஆண்டுக்கு இது $1.1 பில்லியனாகும்.
2010ல் இந்தத் தொகை $2.1 பில்லியனாக இருந்தது.