மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், கிள்ளான் மாவட்டத்தில் உள்ள பண்டார் புக்கிட் ராஜாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
“ஞாயிறு காலை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக ஜாலான் மாக்யோங் பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது,” என்று பண்டார் புக்கிட் ராஜா குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் முகம்மது ஸுல்கிஃப்லி ஒத்மான் கூறினார்.
கனமழையால் பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள நீர்ப்பிடிப்புக் குளங்கள் நிரம்பி வழிந்ததாக அவர் சொன்னார்.
பிரதான சாலையும் பல்வேறு வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வெள்ளநீர் 0.3 மீட்டர் வரை உயர்ந்தது.
ஷா ஆலமில் உள்ள ஓட்டுநர் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் எழுவர், திடீர் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அரை மணிநேரம் சாலையில் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.
ஜாலான் மேரு, கிள்ளான் சென்ட்ரல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தால் 57 வயது மாது ஒருவர் அவரது வாகனத்தில் சிக்கிக்கொண்டார்.
வெள்ளநீர் சூழ்ந்த சாலையில் சென்றபோது அந்த வாகனம் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறை உதவி இயக்குநர் (செயல்பாடு) முகம்மது இஹ்சான் முகம்மது ஸயின் கூறினார்.