தெற்கு உக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சோவியத்கால அணை குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் போர்ப் பகுதி யில் வெள்ளம் புகுந்தது.
நோவா ககோவ்கா என்ற அந்த அணையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் கரையோரமாக உள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.
அணை தகர்க்கப்பட்டதற்கு ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி உள்ளன.
நீர் மின் நிலையத்தின் அணையை ரஷ்யா உடைத்து விட்டதாக உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவும் இது உக்ரேனின் சதி வேலை என்று சாடியது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட படங்களில் அணை உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதை பலர் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.
உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, தேசிய பாதுகாப்பு தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இதில் அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
உக்ரேன் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை யில், ஐநா பாதுகாப்பு மன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதலால் அணைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோ அனைத்துலகத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிக்கை எச்சரித்தது.
உக்ரேனின் நட்பு நாடுகளும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தலைவர் சார்ல்ஸ் மைக்கல், நோவா ககோவ்கா அணையை ரஷ்யா தகர்த்தது போர்க் குற்றத்திற்கு ஈடானது என்றார்.
ஆனால் உக்ரேன் வேண்டுமென்றே அணையைச் சேதப் படுத்தியுள்ளதாக ரஷ்யா கூறி யுள்ளது.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நோவா ககோவ்கா நகரத்தின் நிர்வாகத் தலைவரான விளாடிமிர் லியோன்டிவ், அணை உடைந்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். உக்ரேனின் தாக்குதலால் அணைக்கு சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது, உடைய வில்லை என்றார்.
சுமார் 30 மீட்டர் உயரமும் 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட நோவா ககோவ்கா அணை 1956ல் டினீபர் ஆற்றில் கட்டப்பட்டது. ககோவ்கா நீர் மின்சார ஆலையின் ஒரு பகுதியாக இது அமைக்கப்பட்டது.