இந்தோனீசியாவிலிருந்து அண்டை நாடுகளுக்குப் பரவும் எல்லை தாண்டிய தூசுமூட்டம் இனியொரு பிரச்சினையாக இருக்காது என்று இந்தோனீசிய கடல்துறை விவகார, முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பின்சார் பண்ட்ஜய்டான் தெரிவித்துள்ளார்.
எல் நினோவின் வறண்ட, வெப்பமான காலத்திலும் தூசுமூட்டம் ஏற்படாது. இந்தப் பிரச்சினைக்கு நாடு முன்னேற்பாடு களுடன் ஆயத்தமாக இருப்பதே அதற்கு காரணம் என்று அமைச்சர் கூறினார்.
செயற்கை மழை பொழிய வைப்பதற்காக அதிகாரிகள் பருவநிலை மாற்று தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றனர். நீர்த்தேக்கங்களும் அதிகரிப்படவிருக்கின்றன. இது, காய்ந்த நிலப்பகுதியில் தீ மூளுவதைத் தடுக்கும் என்று அவர் கூறினார்.
அமைச்சர் லுஹுட், சுற்றுச் சூழல் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தூசுமூட்டம் குறித்து சிங்கப்பூரர்கள் கவலைப்பட வேண்டியிருக்குமா என்று கேட்கப்பட்டது.
2016ஆம் ஆண்டில் தூசுமூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த திரு லுஹுட், அப்போதிலிருந்து இந்தப் பிரச்சினை படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.
சுமத்ராவிலும் கலிமந்தானிலும் செம்பனைத் தோட்டங்கள் எரிக்கப்பட்டதால் காற்றில் அதிக அளவு தூசு கலந்து காற்றின் தரம் அப்போது மோசமடைந்ததால் ஆபத்தான நிலையை எட்டியது. இதனால் காட்டுத் தீயும் ஏற்பட்டது.
சிங்கப்பூர் உட்பட தெற்கு ஆசியா வட்டாரத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை அதிக வெப்பம், வறண்ட வானிலையை எதிர்பார்க்கலாம் என்று ஆசியான் சிறப்பு வானிலை நிலையம் (ஏசிஎம்சி) மே 30ஆம் தேதி தெரிவித்தது. 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எல் நினோ பருவநிலையால் தென்கிழக்கு ஆசிய வட்டாரமே அடர்ந்த தூசுமூட்டத்தால் மூடப்பட்டது. இதன் காரணமாக, அதே ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு வரை தொடர்ந்த சுட்டெரிக்கும் வானிலை மிக வெப்பமான ஆண்டாகவும் பதிவானது.