உக்ரேனின் நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டதை அடுத்து, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரேனின் கெர்சான் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அணை உடைந்ததால் கிட்டத்தட்ட 2,700 வீடுகளை நீர் சூழ்ந்துள்ளதாகவும் 1,300 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டதாகவும் ரஷ்யாவின் அரசாங்கச் செய்தி நிறுவனமான `டாஸ்' குறிப்பிட்டது.
அத்துடன், குறைந்தது ஏழு பேரைக் காணவில்லை என்றும் ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டினிப்ரோ ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ககோவ்கா அணை நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டது. இதனால் கெர்சான் வட்டாரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்க, பல்வேறு கிராமத்தினரும் தமது வசிப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
வெள்ளம் காரணமாக டினிப்ரோ ஆற்றை ஒட்டி, ரஷ்யா, உக்ரேன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 42,000 பேருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
அணை தகர்க்கப்பட்டதற்கு ரஷ்யாவும் உக்ரேனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், அணை உடைந்ததால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணு உலைப் பேரிடருக்குப் பிறகு, ககோவ்கா அணை உடைப்புத்தான் உக்ரேன் எதிர்கொண்டு உள்ள ஆகப் பெரிய சுற்றுச்சூழல் பேரிடராக இருக்க முடியும் என்று உக்ரேனின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே மெல்னிக் கூறியுள்ளார்.
அணையிலிருந்து நீர் முழுவதும் வெளியேறிய பின்னரே அது சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய பாதிப்பை மதிப்பிட முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால், வருங்காலத்தில் நீர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.