உலகின் ஆகப் பெரிய சிறுநீரகக் கல்லை 62 வயது முன்னாள் சார்ஜண்ட் கானிஸ்டஸ் கூஞ்ச் என்பவரின் சிறுநீரகத்திலிருந்து இலங்கை ராணுவ மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சரியாக 810 கிராம் எடையுள்ள அந்தக் கல்லின் எடை ஒரு சராசரி ஆண் சிறுநீரகத்தின் எடையைவிட ஐந்து மடங்கு அதிகம் என்று ராணுவம் தெரிவித்தது.
அக்கல் 13.37 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. சராசரி ஆண் சிறுநீரகம் கிட்டத்தட்ட 10 செ.மீ முதல் 12 செ.மீ வரை இருக்கும்.
“உலகின் ஆகப் பெரிய, கனமான சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை ஜூன் 1ஆம் தேதி கொழும்பு ராணுவ மருத்துவமனையில் நடந்தது,” என்று ராணுவ அறிக்கை கூறியது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் திரு கூஞ்ச் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வாய்வழி மருந்துகள் அவருக்கு பலன் தரவில்லை.
“அண்மையில் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினார்,” என்று திரு கானிஸ்டஸ் கூஞ்ச் உள்ளூர் தொலைக்காட்சியிடம் கூறினார்.
கின்னஸ் உலக சாதனையின் படி, 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒரு நோயாளியிடமிருந்து அகற்றப்பட்ட 620 கிராம் சிறுநீரகக் கல்லே இதுவரையில் மிகப் பெரிய கல்லாக இருந்தது. அதனை இப்போது இலங்கை நோயாளியின் கல் முறியடித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை அங்கீகரிப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் புதன்கிழமை இதனை அறிவித்தனர்.
கொழும்பு ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகப் பிரிவின் தலைவர் சிறப்பு மருத்துவர் லெப்டினன் கேணல் டாக்டர் குகதாஸ் சுதர்சன் தலைமையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“நோயாளியின் உயிரைப் பாதுகாப்பதே சவலாக இருந்தது. இந்த கல் இருந்தபோதிலும் சிறுநீரகம் சாதாரணமாக செயல்பட்டுள்ளதே இதில் மிகவும் முக்கியமானது,” என்று டாக்டர் கே.சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
சிறுநீரகத்தில் ரத்தம் சுத்திகரிக்கப்படும்போது தாதுக்களும் உப்புகளும் படிகமாக மாறி, கற்கள் உருவாகின்றன.
இந்தக் கல் கடுமையான வலியை ஏற்படுத்தும். அது மிகப் பெரியதாக இருந்தால் அல்லது சிக்கிக்கொண்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.