மோனலிசா, லாவண்யா வீரராகவன்
தஞ்சோங் பகாரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மரணமடைந்த 20 வயது வினோத்குமார் திருப்பதியின் உடல் இன்று சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்டடம் இடிக்கப்பட்ட போது, சரிந்த சுவரில் மாட்டி வினோத்குமார் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் ஏறத்தாழ 6 மணிநேர தேடலுக்கு பின் வினோத்குமாரின் உடலை மீட்டனர். இரவு 9.45க்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
10 மீட்டர் நீளமும் 3.8 மீட்டர் உயரமும் உடைய அச்சுவர் விழுந்தபோது, அங்கு பணியில் இருந்த அய்க் சன் டெமொலிஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
“பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் கட்டடப்பணி தொடர்பாக எச்சரிக்கை செய்யும் பாதை வழிகாட்டியாக இருந்த வினோத் இவ்விபத்தில் சிக்கிய சூழலை ஊகிக்க முடியவில்லை,” என்று அழுதார் வினோத்தின் தாய்மாமாவான கார்த்திக் சாமுடி, 29. அதே நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் அவர் சம்பவத்தின்போது வேறு இடத்தில் இருந்தார்.
நேற்று பிற்பகல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலிருந்து வினோத்குமாரின் உடலைப் பெற வந்திருந்த அவரது பாட்டியின் இளைய சகோதரரான ராஜமாணிக்கம் திருப்பதி, 44, தான் வளர்த்த பிள்ளையை பறிகொடுத்துவிட்டதாக கண்ணீர் வடித்தார்.
வினோத்குமாரின் உறவினர்கள் எட்டுப் பேர் இங்கு கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர். எல்லாருமே தாங்க முடியாத துயரத்தில் நிலைகுலைந்துள்ளனர்.
“நிலநடுக்கம் போன்ற பேரிடர்களில் அதிர்ஷ்டவசமாக பலர் உயிர்பிழைத்ததுபோல வினோத்தும் உயிருடன் மீட்கப்படுவான் என்றே கடைசிவரை காத்திருந்தோம்,” என்று வினோத்குமாரின் உறவினரான 30 வயது சரண்ராஜ் காமராஜ் கலங்கினார்.
தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், அய்க் சன் டெமொலிஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிய 2022 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் வந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றும் திரு ராஜமாணிக்கம் ஏறத்தாழ இரண்டரை லட்சம் இந்திய ரூபாய் கடன் வாங்கி அவரை சிங்கப்பூருக்கு அழைத்திருந்தார். இயந்திரவியல் பொறியியல் துறையில் பட்டயக்கல்வி பெற்ற இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். பெற்றோர் நாட்சம்பள ஊழியர். இவரது 17 வயது தம்பி ஊரில் பட்டயக்கல்வி படித்து வருகிறார்.
மாதம் $800 முதல் $900 வரை சம்பாதித்த வினோத்குமார், பணியில் சேர்ந்த நாளிலிருந்தே சிக்கனமாக சேமித்து தனக்காக திரு ராஜமாணிக்கம் வாங்கிய கடனில் முக்கால்வாசியை அடைத்திருந்தார்.
சிறு வயதிலிருந்தே மோட்டார்சைக்கிள் மீது அலாதி பிரியம் உள்ள வினோத்குமாரின் கனவு சொந்த வருமானத்தில் உயர்ரக மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என்பதே. கடனை அடைத்த பிறகு மோட்டார்சைக்கிளுக்குப் பணம் சேர்க்கத் திட்டமிட்டிருந்தார் என்றார் அவரது தாய்வழி உறவினரான ஜெய்சங்கர் செல்வம், 28.
வினோத்குமாரின் மரணச் செய்தியை அறிந்து ஏராளமான கிராமத்து மக்கள் அவரது வீட்டில் கூடியுள்ளனர். அவரது நல்லுடலை தமிழகம் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அய்க் சன் டெமொலிஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனம் செய்துள்ளது. திரு ராஜமாணிக்கமும் கார்த்திக் சாமுடியும் இன்று தமிழகம் செல்கின்றனர்.
சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.