இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய உணவகத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு, ரூ1.க்கு பிரியாணி வழங்கப்படுவதாக உணவக நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது.
அதைக் கண்ட மக்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் உணவகத்துக்கு வெளியே திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் செய்தி பரவியதால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. பிரியாணி வாங்க வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் சாலையிலேயே அவற்றை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரியாணி வழங்க தொடங்கியபோது ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சிலர் ரூ.1 கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்துச் சென்றனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே உணவக உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றும் பலன் இல்லை. இதனால் அவர்கள் உணவகத்தைத் தற்காலிகமாக மூடினர். இதையடுத்து வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனர்.