இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்கப் பயணத்தைத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தின்போது முக்கியமான ஓர் உடன்பாடு கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் எஃப்414 போர் விமான இயந்திரங்களை இரு நாடுகளும் சேர்ந்து இந்தியாவில் தயாரிக்க அந்த உடன்பாடு வகைசெய்யும்.
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்தாகும் அந்த உடன்பாட்டின் மூலம் இந்தியாவிற்கு ஜெட் இயந்திர தொழில்நுட்பங்கள் அதிக அளவில் கிடைக்கும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த உடன்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“ஜெனரல் எலக்ட்ரிக் ஜெட் விமான இயந்திரங்களின் மிக முக்கியமான அதிநவீன தொழில்நுட்பங்கள் அந்த உடன்பாட்டின் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கும்.
“அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இதுவரையில் கொடுத்திராத அளவுக்கு அமெரிக்க தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குக் கிடைக்கும்,” என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.