உக்ரேனின் தெற்கு வட்டாரமான கெர்சனில் உள்ள ஹெனிசெஸ்க் என்ற துறைமுக நகரில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த வெடிமருந்து கிடங்கு ஒன்றை அழித்துவிட்டதாக உக்ரேன் தெரிவித்து இருக்கிறது.
“காலை நேரத்தில் எங்கள் ராணுவத்தினர் ரஷ்யாவுக்கு வசமாக அடிகொடுத்துவிட்டனர்,” என்று ஒடெசா வட்டார ராணுவ நிர்வாகம் தெரிவித்தது.
“அந்த நகரில் மிகவும் குறிப்பிடத்தக்க வெடிமருந்து கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. அந்தக் கிடங்கு இப்போது அழிக்கப்பட்டுவிட்டது,” என்று ராணுவத்தள நிர்வாக அதிகாரி பிராட்சுக் கூறினார்.
இதனிடையே, இந்தத் தகவலை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. வெடிமருந்து கிடங்கு அழிக்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் ரஷ்ய தரப்பிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
உக்ரேனிய ஊடகங்கள் பல காணொளிகளை வெளியிட்டன. பெரும் சத்தமும் அதைத் தொடர்ந்து பெரும் புகையும் ஓரிடத்தில் இருந்து கிளம்பியதை அந்தக் காணொளிகள் காட்டின.
அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் வெடிமருந்து கிடங்கு இருந்த இடத்திற்கு ரைகோவ் என்று பெயர்.
அதை ரஷ்யப் படைகள் சென்ற ஆண்டு ஆக்கிரமித்துக் கொண்டன.
இதனிடையே, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, உக்ரேன் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று ரஷ்ய அதிபரிடம் வலியுறுத்திக் கூறினார்.
இருதரப்புகளும் சிறைக் கைதிகளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று திரு ரமபோசா வலியுறுத்தினார்.