உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மொரோக்கோ அணியின் கனவுப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.
நேற்று பின்னிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணியை 2-0 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்கடித்தது.
உலகக் கிண்ணப் போட்டியில் தங்களது அணியின் கனவுப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது ஏமாற்றம் அளித்தாலும், அணி இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக மொரோக்கோ மக்கள் கூறுகின்றனர்.
பிரான்ஸ் தரப்பில் இரண்டாவது கோல் விழுந்தவுடன், கத்தாரின் அல்-பய்த் விளையாட்டரங்கில் அமர்ந்திருந்த ஏராளமான மொரோக்கோ ரசிகர்கள் திடீரென அமைதியடைந்தனர். விளையாட்டரங்கில் மட்டுமல்ல, ராபாட், காசாபிளாங்கா, பெய்ரூட், கைரோ, டாக்கார் உள்ளிட்ட நகர்களிலும் அமைதி நிலை ஏற்பட்டது.
அரபு நாடு ஒன்றில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில், பல ஆப்பிரிக்க, அரபு நாடுகளிலிருந்தும் ரசிகர்களின் ஆதரவை மொரோக்கோ வென்றுள்ளது.
போட்டியின் காலிறுதிச் சுற்றை எட்டிய முதல் அரபு அணி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொரோக்கோ பெற்றுள்ளது.
ஆட்டம் முடிவடைந்தவுடன் பிரெஞ்சு அணியினர் கொண்டாடிவிட்டு திடலிலிருந்து வெளியேறிவிட்டனர். அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர் பட்டாளத்தின் அன்பை உள்வாங்கிக்கொள்ள மொரோக்கோ ஆட்டக்காரர்கள் திடலில் தொடர்ந்து இருந்தனர்.
“எங்கள் அணியை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். நாங்கள் ஏற்கெனவே வரலாறு படைத்துவிட்டோம். அதனால் இந்த ஆட்டத்தை மட்டும் வைத்து எங்கள் வீரர்களை எடைபோட முடியாது,” என்று மொரோக்கோ மாணவரான முகம்மது அலவி, 24, கூறினார்.
உலகக் கிண்ணப் போட்டியைக் காண லண்டனிலிருந்து கத்தாருக்குப் பயணம் செய்த அவர், மொரோக்கோவின் ஒவ்வோர் ஆட்டத்தையும் நேரில் கண்டார்.
மொரோக்கோ தலைநகர் ராபாட்டில், ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே திரண்ட மொரோக்கோ ரசிகர்கள், அணியின் தோல்வியைப் பாராது எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.
இந்த ஆட்டத்தை அரங்கில் நேரில் கண்ட பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன் மொரோக்கோ அணிக்குப் புகழாரம் சூட்டினார்.
“மொரோக்கோ நண்பர்களே, இந்த அழகான பயணத்திற்காக வாழ்த்துகள். காற்பந்து உலகில் நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்,” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.
மொரோக்கோ மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த அணியினரை “நாயகர்கள்” என்று அழைத்த அந்நாட்டுப் பிரதமர் அஸிஸ் அகன்னூச், ஒவ்வொரு நாவிலும் மொரோக்கோவின் பெயர் ஒலிக்கச் செய்ததற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.