இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் தொடர்பான காணொளியை வெளியிட்டது சீனா

இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் தொடர்பான காணொளியை வெளியிட்டது சீனா

2 mins read

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான காணொளி ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது.

அந்த மோதலில் சீனாவைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததை சீனா ஒப்புக்கொண்டதாக நேற்று செய்தி வெளியானது.

அந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

சீனத் தரப்பில் சுமார் 30 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று முன்பு இந்தியா குறிப்பிட்டிருந்தது.

-

"கல்வான் பள்ளத்தாக்கு பகுதில் சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக," இன்று சீன அரசாங்க ஊடகத்தின் செய்தி பகுப்பாய்வாளர் ஷென் ஷிவெய் வெளியிட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பு வீரர்களும் பெரிய ஆற்றை, கடும் குளிரில் கடப்பதை அந்தக் காணொளி காட்டியது. அப்போது இரு தரப்பு வீரர்களும் ஒருவரை மற்றவர் 'திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறுவதையும் காண முடிந்தது.

பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த நிலையில் மலையின் உச்சியில் விளக்குகளுடன் காணப்பட்ட வீரர்கள் லத்தி மற்றும் தடுப்புகளைப் பிடித்தபடி சத்தமிட்டபடி இருந்ததையும் காணொளி காட்டியது.

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய வீரர்கள் தாங்கள் வழக்கமாக ரோந்துப் பணி மேற்கொள்ளும் பகுதிக்குள் செல்ல சீன வீரர்கள் தடுத்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. 1962ஆம் ஆண்டில் இந்தோ-சீன போர்க் காலத்திலும் அந்தப் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆறு மாதங்களாக எல்லையில் இரு நாட்டுப்படைகளும் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பங்கோங் கேரியின் தெற்கு மற்றும் வடக்குக் கரைகளிலிருந்து இரு நாட்டுப் படைகளும் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியா, சீனா இடையே ராணுவ உயரதிகாரிகளுக்கிடையே இன்று 10வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்