பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சீன சூதாட்டக்கூடத்தில் காவல்துறை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அதிரடிச் சோதனை நடத்தியது.
பேங்காக்கின் யன்னாவா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் சீன உணவகமும் மூன்றாம் தளத்தில் சூதாட்டக்கூடமும் இயங்கியது தெரியவந்ததைத் தொடர்ந்து காவல்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டது.
மூன்றாம் தளத்தில் 20க்கும் மேற்பட்ட சூதாட்டக்காரர்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் 10 ஆடவர்கள், இரு மாதர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் எண்மர் சீனாவையும் இருவர் சிங்கப்பூரையும் சேர்ந்தவர்கள். பிலிப்பீன்சை சேர்ந்த ஒருவரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அக்கட்டடத்தின் பொறுப்பாளரான தாய்லாந்துப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் வெள்ளி, சீன யுவான், ஹாங்காங் டாலர், யூரோ உள்ளிட்ட ஆறு மில்லியன் பாட் (S$238,000) மதிப்புக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயங்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது. ஒரு சூதாட்ட மேசை, ஒன்பது நாற்காலிகள், 15 கைப்பேசிகள், சட்டவிரோதமாக இறக்குமதியான 45 போத்தல்கள் மது போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
சிங்கப்பூரர் ஒருவர் தாய்லாந்தில் அனுமதிக்கப்பட்டதைவிட நெடுநாள் தங்கியதும் கண்டறியப்பட்டது.
கட்டடப் பொறுப்பாளரான தாய்லாந்து நாட்டவர், சீன முதலாளி ஒருவரால் தாம் பணியமர்த்தப்பட்டதாகவும் அந்த வேலையை ஓராண்டு காலம் செய்து வருவதாகவும் அதிகாரிகளிடம் கூறினார்.