டாக்கா: பங்ளாதேஷில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பேருந்துமீது ரயில் மோதியதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
கூமில்லாவில் உள்ள இருப்புப்பாதைக் கடப்பிடம் (Railway crossing) ஒன்றில் அதிகாலை 2.45 மணியளவில் நேர்ந்த அவ்விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.
மோதிய வேகத்தில் அந்தப் பேருந்தைக் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் இழுத்துச் சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
விபத்து நேர்ந்தபோது அந்தக் கடப்பிடத்தில் ரயில்வே ஊழியர் எவரும் இல்லை.
நிகழ்விடத்தில் ஐவர் மாண்டதைக் காவல்துறைத் துணை ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
ஆயினும், மாண்டோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துவிட்டது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களில் இரு குழந்தைகளும் மூன்று பெண்களும் அடங்குவர்.
விபத்தையடுத்து 18 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் எட்டுப் பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் காயமுற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்து விசாரிக்க பங்ளாதேஷ் ரயில்வே துறை இரு குழுக்களை அமைத்துள்ளது.
இதற்கிடையே, இருப்புப்பாதை கடப்பிட ஊழியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்திற்குப்பின் சட்டோகிராம் - கூமில்லா இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

