கொழும்பு: இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரியக் பகுதியில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாய்வில், தங்கப் பூச்சு பூசப்பட்ட 17 அரிய வகை புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கே கிட்டத்தட்ட 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டைய நகரமான அனுராதபுரத்தின் அபேகிரி விகார வளாகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 18) சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த மடாலயமாகச் செயல்பட்டதாக நம்பப்படும் அப்பகுதியில், கடந்த 30 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில் இதுவே மிக முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
வெண்கலத்தால் செய்யப்பட்டுத் தங்கப் பூச்சு பூசப்பட்ட அந்தச் சிலைகள், கி.பி 7, 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கைவினைப் பாணியைக் கொண்டுள்ளன. அவை கிட்டத்தட்ட 1,200 முதல் 1,300 ஆண்டுகள் பழைமையானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற முறையில் புதைக்கப்பட்டிருந்த அச்சிலைகள் மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுகள் முடிவடைந்ததும் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1982ல் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட அப்பகுதி, பண்டைய காலத்தில் தேரவாதம், மகாயானம், வஜ்ராயன பௌத்தக் கோட்பாடுகளின் முக்கிய மையமாக விளங்கியதுடன், சீனா, இந்தியாவிலிருந்து அறிஞர்களையும் யாத்ரிகர்களையும் ஈர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.


