மாஸ்கோ: ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தான் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் எனவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் அந்நாட்டின் நெருக்கடிகால தொடர்பான அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தத் தீவிபத்து உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்தது என்றும் விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளிகளிலும் படங்களிலும் தீச்சம்பவம் ஏற்பட்ட இடத்தில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் இருப்பதையும் அங்கு தீ கொழுந்துவிட்டு எரிவதையும் காண முடிந்தது.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட 260 அவசர உதவி பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மிகவும் மோசமாக காயமடைந்தவர்கள் விமானம் மூலம் மாஸ்கோவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர் என அந்த அமைச்சு தெரிவித்தது.

