சமயப் போதனையிலிருந்து மாறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300 பேர் கைது

சமயப் போதனையிலிருந்து மாறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300 பேர் கைது

1 mins read
409df539-ad94-4eb0-ab42-ebd961392035
‘அகமதியா காதியானி’ அமைப்பைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர். - கோப்புப் படம்: மலாய் மெயில்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள லிக்காஸ் பகுதியில், பள்ளி அரங்கம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை (மே 30) நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ‘அகமதியா காதியானி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 12 தலைவர்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இஸ்லாமியப் போதனைகளிலிருந்து மாறுபட்ட கொள்கை நடவடிக்கைகளில் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சாபா மாநில இஸ்லாமிய விவகாரத் துறையும் காவல்துறையும் இணைந்து இந்தக் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக சினார் ஹரியான் ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதுகுறித்துப் பேசிய கோத்தா கினபாலு தற்காலிகப் காவல்துறைத் தலைவர் சையது லாட் சையது அப்துல் ரஹ்மான், கடந்த வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தொடர்பாக வியாழக்கிழமை பொதுமக்களிடமிருந்து சமய விவகாரத் துறைக்குப் புகார் வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த அமைப்பின் போதனைகளுடன் தொடர்புடையவை எனக் கருதப்படும் பல பொருள்களும் சோதனையின்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“இஸ்லாமியப் போதனைகளிலிருந்து விலகியதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திரு சையது எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்