ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், சட்டவிரோதமாக முதலை ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 11 அடி நீளமும் 340 கிலோ எடையும் கொண்ட அம்முதலையைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காவல்துறையினர் பிடித்துச் சென்றனர்.
ஆல்பர்ட் எனப் பெயரிடப்பட்ட அம்முதலைக்கென வீட்டிற்குள்ளேயே ஒரு நீச்சல் குளத்தை அதன் உரிமையாளர் அமைத்திருந்தார். அத்துடன், அந்த நீச்சல் குளத்தில் முதலையுடன் மனிதர்களையும் அவர் அனுமதித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த 30 வயது முதலை கடந்த வாரம் புதன்கிழமையன்று (மார்ச் 13) பிடித்துச் செல்லப்பட்டது.
அம்முதலையை வைத்திருப்பதற்கான உரிமம் 2021ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது என்றும் அதனைப் புதுப்பிப்பதற்கான தனது முயற்சி ஈடேறவில்லை என்றும் டோனி கவல்லரோ என்ற அதன் உரிமையாளர் கூறினார்.
ஆனால், வீட்டில் முதலை வளர்ப்பது சட்ட விரோதம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதலையுடன் நீந்த அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு கவல்லரோ அழைப்பு விடுத்ததாக ‘நியூயார்க் போஸ்ட்’ செய்தி தெரிவிக்கிறது.
மீட்கப்பட்டபோது, அம்முதலைக்கு இரு கண்களிலும் பார்வைத்திறன் பறிபோய்விட்டது என்றும் அதன் முதுகெலும்பிலும் பிரச்சினை இருந்தது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், தனது செல்லப் பிராணியை மீட்டு, வீட்டிற்குக் கொண்டுவர கவல்லரோ போராடி வருகிறார்.
“மற்றவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதைவிட, என் முதலையை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்,” என்று அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.