பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் மாண்டுபோயினர் என்றும் மேலும் 45 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸென்சியோங் மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 22) அதிகாலை 5.51 மணியளவில் ஏற்பட்ட இந்நிலச்சரிவால் 18 வீடுகள் புதையுண்டன.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர் என்று அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
ஆயிரம் மீட்புப் பணியாளர்கள், தீயணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பனி மூடிய மலைகளுக்கு இடையில் குவிந்து கிடந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயல்வதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது.