வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பாலஸ்தீனச் சிறுவனைக் கொன்ற ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (மே 2) 53 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆறு வயது வடீ அல்ஃபாயுமியை 73 வயது ஜோசஃப் ஸுபா கத்தியால் குத்திக் கொன்றார். சிறுவனின் தாயாரையும் அவர் கத்தியால் குத்தினார். அத்தாக்குதலில் திருவாட்டி ஹனான் ஷஹீன் படுகாயம் அடைந்தார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதில் பலர் மாண்டனர்.
அந்தத் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போர் தொடங்கி சில நாள்களில் சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அத்தாக்குதல் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஸுபாக்குச் சொந்தமான வீட்டில் திருவாட்டி ஷஹீனும் அவரது மகனும் வாடகைக்கு இருந்தனர். சிறுவனை ஸுபா 26 முறை கத்தியால் குத்திக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தாக்குதல் சிக்காகோ நகருக்கு 64 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிளேன்ஃபீல்டு நகரில் நிகழ்ந்தது. ஸுபா குற்றவாளி என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.