ஏமனில் இயங்கிவரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சிக் குழு, செங்கடல் பகுதியின் பாப் எல்-மாண்டேப் நீரிணையில் சென்ற வணிகக் கப்பல்மீது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) நடத்திய தாக்குதலில் நான்கு சிப்பந்திகள் மாண்டனர். ஏமன் போக்குவரத்து அமைச்சு அதனைத் தெரிவித்தது.
மாண்டோரில் மூவர் பாகிஸ்தானியர்கள்; ஒருவர் இந்தோனீசியர் என்று அமைச்சு சொன்னது. கப்பல் தாக்கப்பட்ட பிறகு, சிப்பந்திகள், அதன் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாப் எல்-மாண்டேப் தாக்குதலில் ஹூதி எதிர்ப்பு ராணுவக் குழுவைச் சேர்ந்த ஏமனின் மீட்புப் பணியாளர்கள் இருவரும் உயிரிழந்ததாக ஏமனின் கடலோரக் காவற்படை குறிப்பிட்டது. மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் அது சொன்னது.
அதே வேளையில், ஈரானியத் துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற கொள்கலன் கப்பல்மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
பாப் எல்-மாண்டேபில் சவூதி ராணுவ உபகரணங்களை ஏற்றிச்சென்ற கப்பலைத் தாக்கியதாக ஹூதி குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அந்தக் கப்பலின் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை.
சவூதி அனைத்துலகத் தொடர்பு நிலையம் இந்த விவகாரம் குறித்து உடனடியாகக் கருத்து எதனையும் கூறவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயர் ‘திஹாமா’ என்பதை ராய்ட்டர்ஸ் நிறுவனம் உறுதிசெய்தது.


