கோத்தா கினபாலு: தனது வருங்கால மனைவியைக் கொலை செய்ததாக 71 வயது முதியவர்மீது வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) மலேசிய நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ஜுல் எல்மி யூனுஸ் முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்ட பிலுடா சமத் என்ற அந்த முதியவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இம்மாதம் (பிப்ரவரி) 11ஆம் தேதியன்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள், மலேசியாவின் காம்போங் ஸ்ரீ கெனங்கான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து, 44 வயது ஹமிதா ஹுசின் லிசா என்பவரைக் கொலை செய்ததாக பிலுடா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் வேளையில், அங்கு இந்தக் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தனது வாக்குமூலத்தை அளிப்பார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளது என்றும் அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யும் என்றும் சாபா காவல் ஆணையர் டத்தோ ஜௌதே டிகுன் பிப்ரவரி 26 அன்று உறுதிப்படுத்தினார்.
பிப்ரவரி 12 அன்று காலை 6.30 மணியளவில், இந்தா பெர்மாய் பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிப்பாளர்கள் பணியில் இருந்தபோது மனித உடல் பாகங்களைக் கண்டெடுத்தனர்.

