நுவாகோட்: நேப்பாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தின்போது, வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மரங்களின் மீது ஏறி உயிர் பிழைத்த சோயல் காலே என்ற எட்டு வயதுச் சிறுவன், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) தனது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளான். பள்ளியிலேயே தமது இரு மகன்களும் பலியாகிவிட்டனரோ என்று அஞ்சிக்கொண்டிருந்த தாய்க்கு இந்தச் சந்திப்பு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் காலில் முறிவு மற்றும் முகத்தில் காயங்களுடன் சிக்கிய இந்தச் சிறுவன், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) மீட்புக் குழுவினரால் ஹெலிகாப்டர் மூலம் தனியாக மீட்கப்பட்டான். அதே வேளையில், அவனது தாய் மட்டி மாயா தமாங், மாயமான தனது இரு பிள்ளைகளையும் தேடித் தங்குமிடங்கள் மற்றும் உதவி மையங்களுக்கும் இடையே அலைந்து கொண்டிருந்தார்.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய தமாங், “நான்காவது இடத்துக்குச் சென்றபோதும் எனது பிள்ளைகளின் பெயர்கள் பட்டியலில் இல்லை. அவர்கள் அங்கேயும் இல்லை. எனது இரண்டு குழந்தைகளும் உயிருடன் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என்னால் அழ மட்டுமே முடிந்தது, மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
காத்மாண்டுவிற்கு வடக்கே உள்ள ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 17,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. குடும்பங்களிடமிருந்து பிரிந்த குழந்தைகளைக் கண்டறிந்து, பதிவு செய்து, அவர்களை உறவினர்களுடன் மீண்டும் சேர்ப்பதற்கு நேப்பாள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அது கூறியது.


