பேங்காக்: காற்று மாசுடன் போராடிவரும் தாய்லாந்தில் நூற்றுக்கான பள்ளிகள் நச்சுக்காற்று அச்சத்தால் கடந்த வாரம் மூடப்பட்டன. காற்று மாசைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், பயிர்களை எரிப்பதற்கான தடையை மீறும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) உத்தரவிட்டுள்ளது.
பயிர்களை எரிப்பதால் வரும் கரும்புகையுடன் வாகனங்கள், தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து வெளியாகும் புகை கலப்பதால் பேங்காக் மற்றும் அதையொட்டியுள்ள நகரங்களில் இவ்வாண்டு தொடக்கத்தில் காற்று மாசு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
ஜனவரி 31ஆம் தேதி, ‘ஐகியூஏர்’ எனும் காற்று கண்காணிப்பு நிறுவனத்தால் நடத்தப்பட்ட உலகின் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பேங்காக் ஏழாவது இடத்தைப் பிடித்தது.
பயிர்களை எரிக்க விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்குத் தாய்லாந்து அரசாங்கம் ஜனவரி 30ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், தடையை மீறியதால் கைதுசெய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை அது கேட்டுகொண்டது.