டென்வர் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் பாதசாரி ஒருவர் மீது விமானம் ஒன்று மோதியதாகக் கூறப்பட்டது.
என்ஜின் தீப்பிடித்ததாலும், லாஸ் ஏஞ்சலிஸ் செல்லவிருந்த ‘ஃப்ராண்டியர் ஏர்லைன்ஸ்’ பயணிகள் விமானம் மே 8 இரவு தனது புறப்பாட்டைக் கைவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட சிறிய தீயைத் தீயணைப்புத் துறையினர் உடனடியாக அணைத்துவிட்டதாக டென்வர் அனைத்துலக விமான நிலையம் கூறியது.
‘ஏர்பஸ் ஏ321’ (Airbus A321) ரக விமானத்தின் பயணிகள் அறையில் புகை வந்ததாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, விமானிகள் புறப்பாட்டைக் கைவிட்டதாக ஃப்ராண்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தில் இருந்த 224 பயணிகளும் 7 சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அந்த நிறுவனம் கூறியது.
விமானம் மோதியதாகக் கூறப்படும் பாதசாரி குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், விமான நிலையத்துடனும் பிற பாதுகாப்பு அதிகாரிகளுடனும் இணைந்து கூடுதல் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் ஃப்ராண்டியர் நிறுவனம் தெரிவித்தது.
குறைந்தது ஒரு பயணிக்குச் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் விமானத்தில் இருந்த அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் ‘ஏபிசி நியூஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

