வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம், தலைநகரில் இயங்கும் அதன் வரலாற்று அரும்பொருளகத்தைப் புதுப்பித்துள்ளது.
காப்பகம், வாஷிங்டனில் உள்ள அதன் பிரதான வட்டச் சுழல் மாடத்தில் இருந்த காட்சிப்பொருள்களை விரிவாக்கியுள்ளது. கடந்த 75ஆண்டுகளாக நிரந்தர காட்சிக்கு வைக்கப்பட்டவற்றுடன் பல புதிய அம்சங்களை அது இணைத்துள்ளது.
அமெரிக்காவின் 250 ஆண்டு வரலாற்றைக் கொண்டாடுவதோடு, அடிமைத் தனத்தை ஒழித்தது, பெண்களுக்கு வாக்கு உரிமை வழங்கியது ஆகிய அசல் ஆவணங்களோடு சுதந்திரம் அடைந்ததை பிரகனப்படுத்திய பத்திரமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மறுவிரிவாக்கம் என்று கருதப்படுகிறது. பல தளவாடத் தடைகளாலும், அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசாங்க நிர்வாக மாற்றத்தாலும் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்தப் புதிய இணைப்புகள் அரும்பொருளகத்தில் அமைந்துள்ளன.
பெண்கள் வாக்குரிமை குறித்து 1919ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டு 1920ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதா, 1863ஆம் ஆண்டில் அடிமைத் தனத்தை ஒழிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் வரைந்த விடுதலைப் பிரகடனம் ஆகியவை புதிதாக இணைக்கப்பட்ட ஆவணங்களாகும்.
ஏற்கெனவே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பத்திரங்கள், மனித உரிமைச் சட்ட வரைவுகள், முதல் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றின் அருகில் மார்ச் 27ஆம் தேதி அருங்காட்சியகத்தில் எவ்விதப் பரபரப்பும் இன்றி பளிங்குப் பெட்டகங்களில் பழம்பெரும் ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு S$3.8 மில்லியன் (US$3 மில்லியன்) செலவானதாக தேசிய ஆவணக் காப்பக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெட்ரிக் மடன் தெரிவித்தார்.

